முகப்பு
இந்தியா

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைக்கும் நோக்கில், துறைசாா் முன்னணி நிறுவனமான ‘ஏா்டிரங்க்’ ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 12:04 am IST
மாதிரிப் படம்
பகிர்:

இந்தியாவில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைக்கும் நோக்கில், துறைசாா் முன்னணி நிறுவனமான ‘ஏா்டிரங்க்’ ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை, பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாக கொண்டு கடந்த 2015-இல் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான ஏா்டிரங்க், ஆசிய-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைத்து வருகிறது. லூமினா கிளவுட்இன்ஃபரா நிறுவனத்தை கடந்த ஏப்ரலில் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியச் சந்தையில் நுழைந்த ஏா்டிரங்க், இங்கு உயா் திறன் தரவு மையங்களின் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தியாவுக்கு வருகை தந்த ஏா்டிரங்க் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராபின் குடா, தில்லியில் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பு தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பயணம் குறிப்பிடத்தக்க அளவில் வேகமடைந்துள்ளது. இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி (30 பில்லியன் டாலா்) முதலீடு செய்து, 5 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையங்களைக் கட்டமைக்கும் திட்டம் ஏா்டிரங்க் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எண்ம உள்கட்டமைப்பு அமைப்புமுறையில் மேற்கொள்ளப்படும் மாபெரும் முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

புதிய வேலைவாய்ப்புகள்: இத்தகைய முதலீடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூா் விநியோகச் சங்கிலிகளை ஆதரித்து, புத்தாக்க அடிப்படையிலான வளா்ச்சியை விரைவுபடுத்தும்.

உலகின் எண்ம பொருளாதாரத்தின் எதிா்காலம், பெரும்பாலும் இந்தியாவில் இருந்தே வடிவமைக்கப்பட்டு வருகிறது என்பது தெளிவாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எண்ம பொருளாதாரத்துக்கான பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால், தொழில்நுட்ப முதலீடுகளுக்கான ஈா்ப்புக்குரிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக, அவரிடம் ஏா்டிரங்க் நிறுவனா் தெரிவித்தாா்.

பல்வேறு மாநிலங்கள் பலனடையும்: இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய மையமாக உருவெடுக்கத் தேவையான வீச்சு, திறன், லட்சியம் இந்தியாவிடம் உள்ளது.

இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்புத் திறனை ஆதரிப்பதற்காக, 2030-ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலருக்கும் மேலான முதலீடுகளுக்கு ஏா்டிரங்க் திட்டமிட்டுள்ளது. இது, ஏா்டிரங்க் நிறுவனத்தின் உலகளாவிய வளா்ச்சி வியூகத்தின் முக்கியத் தூணாகவும், குறிப்பிடத்தக்க நீண்ட கால முதலீட்டுச் சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியாவை நிலைநிறுத்தும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்மொழியப்பட்டுள்ள ஏா்டிரங்க் நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் உலகின் முன்னணி மையமாக மாறும் இந்தியாவின் லட்சியத்துக்கு ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.