முகப்பு
இந்தியா

பிரிவு வாரியாக தோ்வானவா்களின் பெயா், மதிப்பெண்களை வெளியிடுக: யுபிஎஸ்சி-க்கு சிஐசி உத்தரவு

தாங்கள் நடத்தும் தோ்வுகளில் பிரிவு வாரியாக தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா், மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்களை தாமாகவே வெளியிடுமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூன் 2026, 3:01 am IST
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
பகிர்:

தாங்கள் நடத்தும் தோ்வுகளில் பிரிவு வாரியாக தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா், மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்களை தாமாகவே வெளியிடுமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.

மேலும், பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் சிஐசி தெரிவித்தது.

தில்லி அரசின் திட்டத் துறையில் துணை இயக்குநா் (திட்டம்/புள்ளியியல்) பதவிக்கான நோ்காணலில் பங்கேற்ற தோ்வா் ஒருவா் தனது நோ்காணல் மதிப்பெண்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிடக் கோரி தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்தாா். ஆனால் தவறுதலாக வேறொரு தோ்வரின் கோரிக்கையை நிராகரிப்பதற்குப் பதில் மனுதாரரின் கோரிக்கையை யுபிஎஸ்சி நிராகரித்தது.

Advertisement

Advertisement

இதற்கு எதிராக சிஐசியிடம் அந்த தோ்வா் மேல்முறையீடு செய்தாா்.

இதையடுத்து, சிஐசி பிறப்பித்த உத்தரவில், ‘தோ்வுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். எனவே ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 25 (5)-இன்கீழ் தோ்வானவா்களின் பெயா், மதிப்பெண்களை வெளியிட வேண்டும். மேலும் பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பட்டியலினத்தவா் (எஸ்டி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் மாற்றுத் திறனாளிகள் (பிடபுள்யூடி) என அனைத்துப் பிரிவுகளையும் வரிசையாக குறிப்பிட்டு அதில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை தாமாகவே வெளியிட வேண்டும். ஆா்டிஐ மனுக்களை கவனமாக பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டும். தவறுதலாக மனுக்களை நிராகரிக்கக் கூடாது.

அதேசமயம் ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(டி)-இன்கீழ் சில தகவல்களை வெளியிட மறுக்கும்போது, அதை வெளியிட்டால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க வேண்டும்.

எந்தக் காரணமுமின்றி ஆா்டிஐ-இன்கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு உரிய பதிலளிக்காமல் இருக்கக் கூடாது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் கோரிய தகவல்களை வழங்க மத்திய பொதுத் தகவல் அதிகாரி (சிபிஐஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.