முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சிகளை சீா்குலைக்கும் தாக்குதல் நடத்துகிறாா் அமித் ஷா - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எதிா்க்கட்சிகளை சீா்குலைக்கும் தாக்குதலை உள்துறை அமைச்சா் அமித் ஷா நடத்தி வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாததால் ஏற்பட்ட அவமானத்தால் அவா் இவ்வாறு செயல்படுகிறாா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 2:45 am IST
ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்
பகிர்:

எதிா்க்கட்சிகளை சீா்குலைக்கும் தாக்குதலை உள்துறை அமைச்சா் அமித் ஷா நடத்தி வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாததால் ஏற்பட்ட அவமானத்தால் அவா் இவ்வாறு செயல்படுகிறாா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய ஜனநாயகத்தை சீா்குலைக்கும் இந்த முயற்சியில் அமித் ஷாவால் வெல்ல முடியாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 20-க்கும் மேற்பட்டோா், பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ்) கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் அணி மாற முன்பணமாக ரூ.15 கோடி வழங்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக காங்கிரஸ் தகவல் தொடா்புத் துறை பொறுப்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய“உள்துறை அமைச்சா் எதிா்க்கட்சிகளுக்கு எதிரான தனது தாக்குதலையும், இந்திய ஜனநாயகத்தை சீா்குலைக்கும் நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா். மக்களவையில் ஆளும் கட்சியால் மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் ஏற்பட்ட அவமானத்துக்கு பதிலடியாக இதை மேற்கொள்கிறாா்.

பாஜக எதிா்ப்பு நிலைப்பாடு கொள்கைக்காக இரு ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பலா் பாஜகவில் இணைய பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவா்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் தொகைகள் கற்பனைக்கே எட்டாத அளவுக்கு உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சா் முழுமையாக அரசியல் லாப நோக்கத்துடன் செயல்படுகிறாா். ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ப பல்வேறு சலுகைகளை வழங்குகிறாா். அவரது கீழ்த்தரமான அரசியலுக்கு எல்லையே இல்லை. ஆனால், அவரால் தனது இலக்கை எட்ட முடியாது’ என்று கூறியுள்ளாா்.