திரிணமூல் எம்.பி.க்களின் பிரிவினைக்கு மூளையாகச் செயல்பட்டார் அமித் ஷா: காங்கிரஸ்
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவினைக்கு அமித் ஷா மூளையாகச் செயல்பட்டார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது பற்றி...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவினைக்கு அமித் ஷா மூளையாகச் செயல்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) கடிதம் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அறிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட, கேள்விப்படாத, அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் இணைய முடிவு செய்துள்ளனர். இதற்கும் 20 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோதப் பிரிவினைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூளையாகச் செயல்பட்டார்.
மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தருவதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை உள்ளது.
அமித் ஷா பதவியில் தொடரும் ஒவ்வொரு நாளும் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் அரசியலமைப்பு மற்றும் கோட்பாடுகள் ஆகியவை பலவீனமாகி வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.