தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
கர்நாடகத்தில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக ஊடகப் பதிவில், ”கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, தில்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது. இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே. நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018-இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
Advertisement
Advertisement
மத்திய பாஜக அரசு அமைத்த ஆணையம் தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டாலும் கூட, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது என்பது ஊரறிந்த விஷயம். இதில் மத்திய பாஜக அரசின் மீது நீங்கள் பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல்.
எனவே, CWMA கூறிய பிறகும் கூட தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் இழுத்தடித்த உங்கள் கர்நாடக காங்கிரஸை முடிந்தால் கேள்வி கேளுங்கள். தமிழக முதல்வரை சந்திக்க வருமாறு கூறிவிட்டு, பின்பு சாக்குபோக்கு சொல்லி கதவை சாற்றி, அவமானப்படுத்தியது ஏன் என உங்கள் கட்சியின் கர்நாடக முதல்வருக்கு முடிந்தால் கண்டனம் தெரிவியுங்கள்.
தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் உங்கள் சொந்த அரசிடம், அத்திட்டத்தை கைவிடுமாறு முடிந்தால் எடுத்துக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் வேண்டாம்.
தமிழகத்திற்கு வந்த உங்கள் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், தற்போது தமிழகத்தில் பற்றி எரியும் காவிரி நீர் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்றதில் இருந்தே தெரிகிறது, காங்கிரஸ்காரர்களுக்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை.
கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காவிரி நீர் பிரச்சினை மட்டுமா, கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்கிரஸ். எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Congress refusing to provide water to Tamil Nadu: Nainar Nagendran criticizes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.