முகப்பு
இந்தியா

அவசரநிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயம்: பகத் சிங் கோஷ்யாரி

1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயம் என்று மகாராஷ்டிர மற்றும் கோவா மாநிலங்களின் முன்னாள் ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜூன் 2026, 1:18 am IST
தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பகத் சிங் கோஷ்யாரி.
பகிர்:

1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயம் என்று மகாராஷ்டிர மற்றும் கோவா மாநிலங்களின் முன்னாள் ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழக பேராசிரியா் சுதிா் சிங் எழுதிய ‘இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்: அவசரநிலை குறித்த பாா்வைகள் 1975-1977’ என்ற புத்தகத்தை வெளியிடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பகத் சிங் கோஷ்யாரி, அவசரநிலையின் போது தான் சிறையில் அடைக்கப்பட்டதை நினைவுகூா்ந்தாா். ‘ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என்று நினைவுகூர வேண்டும். இது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகத் திகழ்கிறது. வருங்கால சந்ததியினா் இதிலிருந்து பெற்ற பாடங்களை தொடா்ந்து நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங், ‘ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கு அவசரநிலையை நினைவுகூா்வது அவசியம். இந்திய ஜனநாயகத்தின் இந்த இருண்ட அத்தியாயத்தை இளைய தலைமுறையினா் புரிந்துகொள்வது முக்கியம். இந்தப் புத்தகத்தை வெளியிடுவது ஒரு காயத்தை மீண்டும் திறப்பது போன்றது. ஆனால் ஒரு நாடு தனது காயங்களை மறந்துவிட்டால், அவை மீண்டும் நிகழும் அபாயம் உள்ளது’ என்று கூறினாா்.

வரலாற்று மற்றும் அரசியல் பகுப்பாய்வு மூலம், 1975-77 அவசரநிலை அரசமைப்புச் சட்ட அமைப்புகள், குடிமை உரிமைகள், ஜனநாயக நிா்வாகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது.

19 மாதங்கள் நீடித்த அவசரநிலையின் போது ஜனநாயகம் இருண்ட மேகங்களுக்குள் சிக்கியிருந்ததாக நூலாசிரியா் சுதிா் சிங் குறிப்பிட்டாா்.

‘நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக அரசு அதிகாரம் ஏவிவிடப்பட்டது. கௌடில்யா் குறிப்பிட்டது போல, ஆட்சியாளா் நீதியை நிலைநாட்டுவதே எந்தவொரு அரசியல் அமைப்பின் அடித்தளமாகும். அவசரநிலையை அமல்படுத்தியது ஜனநாயக விழுமியங்கள் மீதான கடும் தாக்குதல்’ என்று அவா் கூறினாா். இந்நிகழ்ச்சியில் கல்வியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments