முகப்பு
இந்தியா

கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்

தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையான அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Updated On : 29 ஜூன் 2026, 5:03 am IST
பகிர்:

தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையான அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் சுமாா் 18,500 அடி உயரத்தில் உள்ள சிவபெருமானின் உறைவிடமாக கருதப்படும் கைலாஷ் மலை மற்றும் அதையொட்டிய புனிதமான மானசரோவா் ஏரியை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த 2020-இல் கரோனா பரவலால் முதலில் நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் 5 ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டது.

இருதரப்பு உறவுகளை இயல்பாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கைலாஷ்-மானசரோவா் யாத்திரை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நடப்பாண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் யாத்திரை நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அதன்படி, உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா ஆகிய இரு வழித்தடங்களில் யாத்திரை நடைபெற்று வருகிறது.

தனியாா் சுற்றுலா ஏற்பட்டாளா்கள் மூலம் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், சீனாவுக்குள் நுழைவதற்கு முறையான அனுமதி மற்றும் விசா இல்லாமல் நேபாளத்தில் தவிக்கும் நிலை ஏற்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு புகாா்கள் மற்றும் கோரிக்கைகள் வந்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, யாத்ரிகா்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ‘தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையாக பதிவு செய்தவா்களா, அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களும் பெறும் வரை யாத்திரையைத் தொடங்கக் கூடாது’ என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments