கேரளத்தில் 2,000 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!
கேரளத்தில் 2,000 சட்டவிரோத கடன் செயலிகள் மற்றும் ,000-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கும் விதமாக சுமார் 2,000 சட்டவிரோதக் கடன் செயலிகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
அரசு இப்பிரச்னையைத் தீவிரமாகக் கருதுவதால் காலதிற்கு ஏற்றவாறு மாறிவரும் இணையக் குற்றங்களைத் தடுக்க விரிவான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேரளத்தில் அதிகரித்துள்ள இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகள் பற்றியும், இந்தக் குற்றங்களில் நாட்டில் 3-வது இடத்தில் கேரளம் இருப்பதாகக் குறிப்பிட்டு அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அபின் வர்க்கி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
இதுபற்றிப் பேசிய எம்.எல்.ஏ. அபின் வர்க்கி, “கேரளத்தில் கடந்தாண்டில் மட்டும் இணையக் குற்றங்களால் 42,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால், ரூ. 814 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பாதி ஆன்லைன் வர்த்தக செயலிகள் மூலமாக ஏற்பட்டவை. அபராதம், பயன்பாட்டுக் கட்டணங்கள் என்ற பெயரில் ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, ”கேரளத்தில் இணையக் குற்றங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66டி மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இணைய மோசடிக்கு பயன்படுத்தப்படும் போலி இணையதளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகள் அதிகளவில் முடக்கப்பட்டு வருகிறது.
இதில், ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்ட 1,836 கடன் செயலிகளும், நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களும் காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல, இணையம் சார்ந்த கண்காணிப்புப் பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக நடைபெறும் நிதி மோசடிகளில் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.
2,000 illegal loan apps blocked in Kerala!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.