கமேனி இறுதிச்சடங்கு: ஈரான் செல்கிறாரா பிரதமர் மோடி?
ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய அரசு சார்பில் பங்கேற்போர் பற்றி...
ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய அரசு சார்பில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா போர்
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கினர். அன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயோதுல்லா சைய்யது அலி கமேனி கொல்லப்பட்டார். கமேனி, ஈரான் அதிபராக 8 ஆண்டுகளும், ஈரான் உச்சத் தலைவராக கிட்டத்தட்ட 37 ஆண்டுகளும் நாட்டை வழிநடத்தினார்.
Advertisement
Advertisement
அவரது மறைவு மோதலைத் தீவிரப்படுத்திய நிலையில் இஸ்ரேல், அமெரிக்க ராணுவம் மீது ஈரானும் பெரியளவில் தாக்குதல்களை நடத்தியது. இதனால், அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வந்தது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கமேனி இறுதிச்சடங்கு
போர் காரணமாக உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு தாமதமானதால் அவரது உடல் தெஹ்ரானில் உள்ள அரசு வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கமேனியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா நினைவிடத்தில் ஜூலை 9 அன்று நடைபெறும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.
கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா நினைவிடத்தில் ஜூலை 9 அன்று நடைபெறும் நல்லடக்கத்திற்கு முன்னதாக, தெஹ்ரான் மற்றும் புனித நகரமான கோமில் துக்க நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 4 முதல் 9 வரை இறுதிசடங்கு தொடர்பான துக்க நிகழ்வுகள் ஈரானின் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்திய அரசு சார்பில் பங்கேற்போர் யார்?
கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய அரசு சார்பில் பிகார் ஆளுநரும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான சையத் அதா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிதா ஆகியோர் கலந்துகொள்ளவதாகக் கூறப்படுகின்றது.
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஜூலை 4 முதல் தொடங்கவுள்ள இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் இந்திய அரசு சார்பில் அவர்கள் இருவரும் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய கூட்டாளி நாடுகளுடனான உறவைப் பேணும் நடைமுறைக்கு ஏற்ப, முக்கிய நிகழ்வுகளில் இந்திய அரசின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்யும் விதமாக உயர்மட்டக் குழு சார்பில் இருவரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து அரசுமுறை பயணமாக செல்ல இருப்பதால், அவர் ஈரானுக்கு பயணம் மேற்கொள்வார் என அரசு சார்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கமேனி கொல்லப்பட்ட பின்னர் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஈரானின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து அங்கு நடைபெற்ற நிக்ழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தனர்.
இரு நாடுகளும் தொடந்து உயர்மட்ட அரசியல் செயல்பாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு தொடர்பான கூட்டத்திற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தில்லிக்கு வருகை தந்தார். அப்போது, ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், பிரதமர் மோடியையும் சந்தித்தார்.
Regarding those representing the Indian government at the funeral of Iran's Supreme Leader Khamenei
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.