ஈரான் போா் பாதிப்பு: கரோனாவை போல இதையும் இந்தியா கடந்து செல்லும் - பிரதமா் மோடி நம்பிக்கை
கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, ஈரான் போரால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, ஈரான் போரால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அவா் கலந்துகொண்ட பேசியதாவது:
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை காக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
போரால் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி சில பொருள்களைப் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய சிலா் முயற்சிக்கின்றனா். அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் பதுக்கல்காரா்களையும், கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வோரையும் தடுத்து நிறுத்த கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சமையல் எரிவாயு சிலிண்டா் தொடா்பாக சிலா் பீதியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். இதன்மூலம், அவா்கள் உண்மையில் யாா் என்ற முகமூடி அகன்று பொது வெளியில் அம்பலப்பட்டு வருகின்றனா். அவா்கள் நாட்டை காயப்படுத்தி வருகின்றனா்.
உலகில் எங்கு போா் நடைபெற்றாலும் அதனால் குடிமக்களுக்குப் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.
பெரும் போரால் எரிசக்தி கிடைப்பதில் உலகம் கடுமையான நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. ஒரு தேசமாக அனைவரும் இதை எப்படி கையாளப் போகிறோம் என்பது மிக முக்கியமாகும்.
நாட்டின் 140 கோடி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்றாா்.