மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: ராகுல் காந்தி எச்சரிக்கை!
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
தில்லியில் உள்ள இந்திரா பவனில் பழங்குடியின மக்கள் தொடர்பாக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியினத் தலைவர்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இது வெறும் ஆரம்பமே. மக்கள் இதற்கு முன்பு கண்டிராத ஒரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கவிருக்கிறது. அதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது’’ என்றார்.
Advertisement
Advertisement
முக்கிய நிறுவனங்களைச் சார்ந்த தனிநபர்கள் எதிர்க்கட்சியினருடன் அதிகளவு தகவல்களை பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி , ’நிறுவனங்கள் சார்ந்த கிளர்ச்சி’ ஒன்று நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
"ஒரு காலத்தில் முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அமைப்பு, தற்போது ஆட்டம் கண்டு அவர்களுக்குள்ளாகவே சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் ஓராண்டு கூட பதவியில் நீடிக்கமாட்டார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
’’பெருகிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே அதிருப்தி தீவிரமாகும். நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் கூடி, தேர்தல் நடைமுறைகள், நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் இந்தச் சூழலை மேலும் மோசமாக்கும்.
பொதுமக்களின் அதிருப்தியைக் கட்டுப்படுத்த அரசு வரும் காலங்களில் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேநேரத்தில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் மீதான தனது கட்டுப்பாட்டையும் அவர்கள் இழந்து வருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.