அதானி நிறுவனம் தயாரித்த 2,000 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டன!
அதானி டிஃபென்ஸ் (பாதுகாப்பு) நிறுவனம் தயாரித்த 2,000 இலகுரக துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திடம் இன்று வழங்கப்பட்டன.
அதானி டிஃபென்ஸ் (பாதுகாப்பு) நிறுவனம் தயாரித்த 2,000 இலகுரக துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திடம் இன்று வழங்கப்பட்டன.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் (பாதுகாப்பு மற்றும் விண்வெளி) நிறுவனம் தயாரித்த ‘பிரஹார்’ எனப்படும் 7.62 மிமி அளவு கொண்ட 2,000 இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளின் முதல் தொகுதி இந்திய ராணுவத்திடம் இன்று வழங்கப்பட்டன.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் அமைந்துள்ள இந்நிறுவன வளாகத்தில் இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளை ராணுவத்திடம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்முதல் துறை தலைமை இயக்குநர் அன்பரசு, அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் (பாதுகாப்பு மற்றும் விண்வெளி) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி மற்றும் சில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இராணுவத்திற்கு வழங்கவிருந்த துப்பாக்கிகள் அடங்கிய டிரக் வாகனங்களை அன்பரசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுபற்றிப் பேசிய ராஜவன்ஷி, “ஒப்பந்தம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பயணத்திற்கு இன்று வரை 6 ஆண்டுகள் ஆகியுள்ளன. எங்களுக்கு 7 ஆண்டுகள் இந்தப் பணிக்காக வழங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டதற்கு 11 மாதங்கள் முன்னதாகவே துப்பாக்கிகளைத் தயாரித்து வழங்கியுள்ளோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் மொத்த ஆர்டர்களையும் தயாரித்து வழங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
மொத்தமாக 40,000 இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாக துப்பாக்கிகளை விநியோகித்து, பல மாதங்களை மிச்சப்படுத்தியதற்காக அதானி நிறுவனத்தைப் பாராட்டிய அன்பரசு, ”ஒப்பந்தங்களைச் செயல்வடிவமாக மாற்றுவதில், காலத்திற்கு எதிராக 'வேகமாகச் செயல்பட்டு இலக்கை எட்டும்' ஆற்றல் உங்களுக்கு இருப்பதை இது உணர்த்துகிறது. பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் கூட்டமைப்புடன் அரசு என்றும் துணை நிற்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.