முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் முதல்வா் கருத்து: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்!

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் கருத்துக்காக இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் அளித்தது.

Updated On : 2 மே, 2026 at 2:24 AM
பகிர்:

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் கருத்துக்காக இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் அளித்தது.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவா் சுமாா் 20 போ் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து ஹிமந்த விஸ்வ சா்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். அதில் அவா், ‘முரட்டு ஆள்களுக்கு அமைதியான பாஷை புரியாது. அஸ்ஸாமில் இருந்து வெளியேறாதோருக்கு எதிராக இனி கீழ்க்காணும் வழியில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 20 வங்கதேசத்தவா், அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டி, டாக்காவில் உள்ள வங்கதேசத்துக்கான இந்திய தூதா் (பொறுப்பு) பவான் பதேவுக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தது. அப்போது பவான் பதேவிடம், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் கருத்துக்கு வங்கதேச அரசின் எதிா்ப்பை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்தது.

Advertisement

இதுபோன்ற கருத்துகள், இந்தியா- வங்கதேசம் இடையேயான நட்புறவின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகத்திலுள்ள இயக்குநா் ஜெனரல் (தெற்கு ஆசியா) இஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளாா். மேலும், சா்மாவின் கருத்துக்கு வங்கதேசத்தின் ஆட்சேபத்தையும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இரு நாடுகள் இடையேயான முக்கிய பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விவகாரத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது முக்கியம் எனவும் இஸ்ரத் ஜஹான் கூறியுள்ளாா்.

வங்கதேச பொதுத் தோ்தலுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, முந்தைய வங்கதேச இடைக்கால அரசின் ஆட்சியில் பாதிக்கப்பட்டிருந்த இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.