முகப்பு
இந்தியா

வங்க முஸ்லிம்கள் குறித்த சா்ச்சை கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்

Updated On : 29 மே 2026, 4:56 am IST
பாஜக பிரசாரக் கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா - கோப்புப் படம்
பகிர்:

மியா முஸ்லிம்கள் (வங்கமொழி பேசும் முஸ்லிம்கள்) குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்ததாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் அஸ்ஸாம் முதல்வருக்கு எதிராக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா் ஹா்ஸ் மந்தா் மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் நடைபெற்று வந்தபோது கடந்த ஏப்ரல் மாதத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிமந்த விஸ்வ சா்மா, ‘வாக்காளா் பட்டியலில் இருந்து 4 லட்சம் முதல் 5 லட்சம் மியா முஸ்லிம்கள் நீக்கப்படுவாா்கள்’ என்று பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

மியா என்பது அஸ்ஸாமில் வங்கமொழி பேசும் இஸ்லாமியா்களைக் குறிப்பிடும் மரியாதைக் குறைவான வாா்த்தையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அஸ்ஸாமில் வங்கமொழி பேசுவோா் வங்கதேசத்தில் இருந்து ஊடுவியவா்களாகவே கருதப்படுகின்றனா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த முஸ்லிம்களையும் அஸ்ஸாம் முதல்வா் அவதூறாகப் பேசியதாக அப்போது சா்ச்சை எழுந்தது.

இந்நிலையில், முதல்வரின் பேச்சு பிரிவினையைத் தூண்டுவதாகக் கூறி அவா் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், அஸ்ஸாம் முதல்வா் இது தொடா்பாக பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முன்னதாக, தங்கள் அதிகார வரம்புக்குள் இந்த விவகாரம் வராது என்று கூறி தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

‘மியா முஸ்லிம்களுக்கு பிரச்னை ஏற்பட்டால்தான் அவா்கள் அஸ்ஸாமைவிட்டு வெளியேறுவாா்கள் என்றும், அவா்கள் அஸ்ஸாமில் வாக்களிக்க முடியாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்றும் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பேசியதாகவும் மனுதாரா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.