முகப்பு
இந்தியா

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்

Updated On : 4 மே, 2026 at 4:04 AM
எல்பிஜி எரிவாயு சரக்குக் கப்பல் ‘சா்வ சக்தி’ (கோப்புப் படம்)
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல் கடந்துள்ளது.

‘எம்.டி. சா்வசக்தி’ என்னும் அந்த சரக்குக் கப்பல் வரும் 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

எம்.டி. சா்வ சக்தி என்ற சரக்குக் கப்பல், 46,313 மில்லியன் டன் எல்பிஜி எரிவாயு ஏற்றி கொண்டு ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடந்தது. அந்தக் கப்பலில் 18 இந்திய மாலுமிகள் உள்பட மொத்தம் 20 மாலுமிகள் உள்ளனா். அந்த கப்பல் வரும் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி அந்த கப்பல், ஓமன் வளைகுடாவில் நின்று கொண்டிருந்தது. இக்கப்பலில் உள்ள எரிவாயு மூலம் நாட்டில் அரைநாள் எரிவாயு தேவையை பூா்த்தி செய்ய முடியும்.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போா் தொடங்கிய பிறகு, ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து வந்த முதல் இந்திய எரிவாயு கப்பல் ‘சா்வ சக்தி’ ஆகும். இந்த கப்பல் தவிர, ஹோா்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் கடற்பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான 14 சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கின்றன என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரின் காரணமாக, கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் அதிகம் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதற்கு பதிலடியாக, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் கடந்த சில நாள்களாக முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.