டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு...
டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமா் கம்லா பொ்சாத் பிசேசரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
ஜமைக்கா, சுரிநாம், டிரினிடாட்- டொபேகோ ஆகிய 3 நாடுகளில் ஜெய்சங்கா் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டமாக, டிரினிடாட்-டொபேகோ நாட்டுக்கு ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சென்றாா். அந்நாட்டின் தலைநகா் போா்ட் ஆப் ஸ்பெயினில் பிரதமா் கம்லா பொ்சாதை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது இருவரும் இந்தியா, டிரினிடாட்- டொபேகோ நாடுகள் இடையேயான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கும், புதிய திட்டங்கள், முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
Advertisement
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து டிரினிடாட்- டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினேன். கடந்தாண்டு பிரதமா் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய திட்டங்கள், முயற்சிகளை எடுப்பது குறித்து ஆலோசித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.