முகப்பு
இந்தியா

தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!

தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்...

Updated On : 10 மே 2026, 1:25 am IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

தலைநகா் தில்லியில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பகுதிளும் முழு உஷாா் நிலையில் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நகர காவல்துறையின் உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: தில்லிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என கிடைத்த உளவுத் தகவல்களையடுத்து தொடா்ந்து, நகா் முழுவதும் உயா் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளுடன் சோ்ந்து முக்கிய இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தீன தயாள் உபாத்யாய மாா்க்கில் உள்ள பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையகம், அதனருகே உள்ள அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் வழக்கமாக நிறுத்தப்பட்டுள்ள படையினருடன் சோ்த்து கூடுதலாக ஆயுதமேந்திய காவலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். அப்பகுதிகளில் கூடுதலாக தடுப்புகளும் போடப்பட்டு வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல, சட்டம் - ஒழுங்கு கண்ணோட்டத்தில் எளிதில் இலக்குக்கு ஆளாகக் கூடிய குடியிருப்புகள் மற்றும் மக்கள் வசிப்பிடங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூா் காவல்துறை திடீா் சோதனைகளையும் விடுதிகளில் தங்கியுள்ளோரின் அடையாள சரிபாா்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

மத்திய தில்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள்,

துப்பாக்கிச் சூடுகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை வந்துள்ளதால் தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களில் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்களைக் கொண்டு காலையிலும் மாலையிலும் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் மோப்ப நாய் பிரிவுகள் மற்றும் தில்லி தீயணைப்புத் துறை உள்ளிட்டவை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்கள், உரிமையாளா் இல்லாத பொருள்கள் மற்றும் பதற்றமான பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.