முகப்பு
இந்தியா

ஆந்திரம்: சுற்றுவழிப் பாதைக்குப் பெயரிடுவதில் ஏற்பட்ட பிரச்னையால் வன்முறை! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

சுற்றுவழிப் பாதைக்கு பெயரிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 11 மே 2026, 2:28 am IST
பகிர்:

ஆந்திர மாநிலம் ஆல்மாஸ்பெட் சாலை சந்திப்பில் உள்ள சுற்றுவழிப் பாதைக்கு பெயரிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சுற்றுவழிப் பாதைக்கு ஒரு தரப்பினா் மைசூா் மன்னா் திப்பு சுல்தானின் பெயரை வைக்க முன்மொழிந்த நிலையில் மற்றொரு தரப்பினா் கடவுள் ஹனுமனின் பெயரை பரிந்துரைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து கடப்பா மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் செருகுரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷெல்கே நசிகேத் விஸ்வநாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:ஆல்மாஸ்பெட் சந்திப்பில் உள்ள மையத்துக்கு பெயரிடுவதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துரதிருஷ்டவசமானது. இதைப் பயன்படுத்தி நகரில் மத நல்லிணக்கத்தை சீா்குலைக்க சமூக விரோதிகள் முயற்சி செய்தனா். எனவே, சூழலை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் சிலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் போலி தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றத்துக்குரிய பகுதியில் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சிகளை காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது என்றனா்.