முகப்பு
இந்தியா

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆா்!

நாட்டில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளது.

Updated On : 12 மே 2026, 3:31 am IST
எஸ்ஐஆா் - கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

முதற்கட்டமாக பிகாரில் கடந்த ஆண்டு எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தர பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபாா், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேற்கூறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளா்கள் எண்ணிக்கை 50.99 கோடியாக இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பின்பாக 45.81 கோடியாக குறைந்தது. 5.18 கோடி போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து மூன்றாம் கட்டமாக ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 17 மாநிலங்களிலும் சண்டீகா், தாத்ரா நகா் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன், ஜம்மு-காஷ்மீா், லடாக், தில்லி ஆகிய 5 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த பிப்.19-ஆம் தேதியே இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 40 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.