16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
மே 30 முதல் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை மே 30 முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக பிகாரில் கடந்த ஆண்டு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தர பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேற்கூறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர்கள் எண்ணிக்கை 50.99 கோடியாக இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பின்பாக 45.81 கோடியாக குறைந்தது. 5.18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
Advertisement
இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்கள் சண்டீகர், தில்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மே 30 முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹிமாசல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் எஸ்ஐஆர் நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிக்காக 3.94 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 36.73 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.