ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொன்னது ஏன்? சாத்தியமாகுமா?
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொல்லியிருப்பதன் பின்னணி என்ன?
ஈரான் - அமெரிக்க போர் காரணமாக நேரிட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பெட்ரோலியப் பொருள்கள் சிக்கனம், திருமணத்துக்காக ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியிருப்பது ஏன் என்ற கேள்வியோடு, அது சாத்தியமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு 700 - 800 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. நாட்டில் வெறும் 1 - 2 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், நாட்டின் தங்கம் தேவையில் 90 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதியை நம்பியிருக்கிறது.
ஏற்கனவே விலை உயர்வால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து 2026 ஜனவரியில் இறக்குமதி 100 டன் வரை குறைந்தது. பிப்ரவரியிலும் 65 - 66 டன் தங்கம் இறக்குமதி குறைந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் இது 20 - 25 மற்றும் 15 டன்களாக மாறியது. எனவே, மீண்டும் தங்கம் இறக்குமதி பழைய நிலையை எட்டுகிறது.
Advertisement
தங்கம் வாங்குவதைக் குறைக்க மோடி வலியுறுத்திய நிலையில், இன்று காலை பங்குச் சந்தைகள் தொடங்கியதும் தங்க நகைகளின் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மற்ற இறக்குமதிகளைப் போல, இது தொழிற்துறை அல்லது உற்பத்திக்கான இறக்குமதியாக இல்லாததும் அந்நியச் செலாவணி கையிருப்பை நேரடியாக பாதிப்பதுமாக உள்ளது.
ஒருபக்கம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.15 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், எட்டாக்கனியாகிவிட்ட தங்கத்தை வாங்குகள் என்று சொன்னாலும் வாங்க முடியாத நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள். மற்றொருபக்கம் செல்வச்செழிப்பில் தங்கத்தை வாங்குவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர்கள் மோடியின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்களா என்ற கேள்வியும் உருவாகிறது.
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் பிரதமரின் கோரிக்கை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமா்,இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இப்பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தினால், அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், போரின் தாக்கங்களையும் குறைக்க முடியும்.
அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதை ஓராண்டு நிறுத்திவைக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அதற்குக் காரணம், அந்நியச் செலாவணி அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு இடம் தங்கம் வாங்குவது. உலகிலேயே சொந்தப் பயன்பாட்டுக்காக மக்கள் அதிகம் தங்கம் வாங்கிக் குவிப்பது இந்தியாவில்தான் அதிகம். அதிலும் குறிப்பாக பண்டிகைக் காலங்கள், முகூர்த்த காலங்களில் தங்கம் விற்பனை படுஜோராக நடக்கும். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் தங்கம் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால், டாலர் வெளியேற்றம் அதிகரித்து, நாட்டின் இறக்குமதிச் செலவையும் அதிகரிக்கச் செய்கிறது.
ஈரான் - அமெரிக்க போர் காரணமாக, உலகளவில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறை போர் நிறுத்தம் உறுதி செய்யப்படாதபோதும், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது.
அது மட்டுமல்லாமல், போர் போன்ற அசாதாரண சூழல்களில் ஏராளமான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கிவிடுவார்கள். இதுவும் மறுபக்கம் தங்கத்தின் விலையை உச்சம் தொடவைக்கிறது.
ஆனால் மறுபக்கம், தங்கம் பொருளாதாரத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. தங்கம் வட்டி ஈட்டுவதில்லை. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யப்படும் தொகை முடங்குகிறது.
எனவே, சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போது, இந்தியாவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும்போது அந்நியச் செலாவணி உயர்கிறது. போர்க் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், தங்கம் வாங்குவது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதிக்கிறது.
இவையெல்லாம் பொருளாதாரக் காரணிகள். ஆனால், தங்கம் வாங்குவது என்பது இந்திய நாட்டின் கலாசாரத்தில் ஊறிப்போயிருக்கும் விஷயம். திருமணத்துக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்றால், தங்கம் போடாமல் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? எத்தனையோ மாற்றங்கள் நிகழ்இந்த ஓராண்டில் தங்கம் வாங்காமல் இருந்துவிட்டு, அடுத்த ஆண்டு தங்கம் விலை இன்னமும் உயர்ந்தபிறகு வாங்கினால் அதற்கு மத்திய அரசு இழப்பீடு தருமா? பெரும்பாலான மக்கள் வாங்குவது கிராம் முதல் சில சவரன்கள்தான். அவர்களது அவசிய மற்றும் அத்தியாவசியத் தேவைக்காகத்தான் வாங்குகிறார்கள். அதனை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறாரா பிரதமர் மோடி அல்லது கஜானாக்களில் வாங்கிக் குவிக்க கிலோவில் வாங்கும் பணக்காரர்களை சொல்கிறாரா? என்பதில்தான் விளக்கம் தேவைப்படுகிறது என்கிறார்கள் மக்கள்.