முகப்பு
இந்தியா

மவுசு குறையாத தங்கம் இறக்குமதி... பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தும் 34% உயர்வு!

தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதும், இந்தியாவில் அதிகரித்துள்ள தங்க இறக்குமதியைப் பற்றி...

Updated On : 17 ஜூன் 2026, 10:33 am IST
பிரதமர் மோடி.
பகிர்:

தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தும் தங்க இறக்குமதி 34% அதிகரித்திருக்கிறது.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக நேரிட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், பெட்ரோலியப் பொருள்கள் சிக்கனம், திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்காகவும் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கடந்த மே 10 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கு; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற சேமிப்பு என சூசகமாகப் பிரதமர் மோடி பேசிய அடுத்த நாளே தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கும் வகையிலும், தங்கம் வாக்குபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் தங்கத்தின் இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால், ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 8,000 வரை உயர்ந்தது.

Advertisement

Advertisement

இந்தியாவில் ஆண்டுக்கு 700 முதல் 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் வெறும் 1 - 2 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், நாட்டின் தங்கம் தேவையில் 90 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதியை நம்பியிருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காதணி விழா, திருமணம், நிச்சயதார்த்தம் என அனைத்து விழாக்களிலும் தங்க ஆபரணங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.15 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், ஏழைகளுக்கு மட்டுமின்றி, யாருக்குமே எட்டாக் கனியாகிவிட்ட தங்கத்தை வாங்க நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தயங்கும் நிலையில், தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுவதைப் பார்த்து நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை விற்று தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சையும் கேட்காமல் தங்கம் விலை தொடர்ந்து உயருமோ என்ற அச்சத்தில் மே மாதத்திலும் பலரும் தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்குப் பின்னர், நாட்டின் தங்க இறக்குமதி மே மாதத்தில் 34 சதவிகிதம் அதிகரித்து 3.42 பில்லியன் டாலராக உயர்ந்தது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல், மே மாதத்தில் இந்தியா 9.04 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 60% அதிகரித்து அனைவருக்கு ஆச்சரியமளித்துள்ளது.

கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளி இறக்குமதி, நடப்பாண்டு மேயில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவிகித வீழ்ச்சி.

summary

India’s gold imports jumped by 34% to $3.42 billion in May despite a sharp increase in tariffs and an appeal by Prime Minister Narendra Modi to avoid buying the precious metal to protect the country’s foreign exchange.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.