பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!
பெங்களூரில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து...
பெங்களூரில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்ற குற்றத்துக்காக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பெங்களூரின் அசோக் நகர் மற்றும் மல்லேஸ்வரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல்களையடுத்து, காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
ரூ. 2.56 கோடி சந்தை மதிப்பிலான 3 கிலோ 686 கிராம் ஹைட்ரோ கஞ்சா, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஹைட்ரோ கஞ்சாவை குறைந்த விலையில் வாங்கி, பொதுமக்களுக்கு விற்றதாக ஒப்புக்கொண்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹைட்ரோ கஞ்சா என்பது மண்ணைப் பயன்படுத்தாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலம் செயற்கையான முறையில், பெரும்பாலும் மூடிய அறைகளில் வளர்க்கப்படும் ஒரு வகை கஞ்சா ஆகும்.