பாடகர்கள் வெட்டிக் கொலை: 7 பேர் கைது!
பாடகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டது குறித்து...
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மணிமங்கலம் அருகே, பாடகர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் என்ற பரத்குமாா் (25), சீனு என்ற சீனிவாசன் (24). இருவரும் தெம்மாங்கு பாடல் பாடும் தொழில் செய்து வந்தனா்.
இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு படப்பையில் இசைக்கச்சேரியில் தெம்மாங்கு பாடல்கள் பாடிவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மணிமங்கலம் திரும்பியுள்ளனர்.
Advertisement
மணிமங்கலம் அருகே ஒரத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மணம்பாக்கம் பசும்பொன்தெருவில் உள்ள மோகன் என்பவர் வீட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது பட்டப்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்த நிலையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மணிமங்கலம் போலீஸார் இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்தும், தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தோஷ் (23), கலைச்செல்வன் (20), ஐயப்பன் (26), குமரவேல் (20), (வேலன் (19) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.