நீட் தேர்வு ரத்து: மாணவர்கள் வாழ்வின் மீது அரசுக்கு அக்கறை இல்லை! - இந்திய கம்யூனிஸ்ட்
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது, மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது குறித்து...
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது, மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.
அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய டி. ராஜா, “இந்த நடவடிக்கை நமது மாணவர்களின் வாழ்வின் மீது அரசு காட்டும் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அவர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுகிறது. வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு? ஒரு விரிவான விசாரணை நடைபெற்று, உண்மையை வெளிக்கொணர வேண்டும். நமது கல்வி முறையை வலுப்படுத்துவதில் நாம் உணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.