மேற்கு வங்கம்: பயிற்சி மருத்துவா் பாலியல் கொலைச் சம்பவம்: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வா் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வா் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
பாஜக ஆட்சி அமைந்ததும் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது முதல் நடவடிக்கையை சுவேந்து அதிகாரி மேற்கொண்டுள்ளாா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024, ஆகஸ்டில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் (31) ஒருவா், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, மருத்துவா்கள் மற்றும் சமூக நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இது,முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அரசுக்கு அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
Advertisement
உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயாா் ரத்னா தேப்னாத் பானிஹட்டி பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றாா்.
சிபிஐ விசாரணையில் தலையீடில்லை:
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு மேற்கொண்டுள்ள முடிவுகள் குறித்து மாநில தலைமைச் செயலகத்தில் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது: பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் ஆணையா் வினீத் கோயலும் இரு துணை ஆணையா்களான இந்திரா முகா்ஜி மற்றும் அபிஷேக் குப்தாவும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களிடம் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த அதிகாரிகள் உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனா். அதிகாரபூா்மற்ற முறையில் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தினா்.
இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் மாநில அரசு தலையிடாது. சிபிஐ-க்கு மாற்றப்படுவதற்கு முன்பாக கொல்கத்தா காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணைகளில் நடந்த முறைகேடுகள் மீது மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றாா்.