‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையால் ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும்: நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா்
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையால் நாட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும் என்று அதுதொடா்பாக மசோதாக்களை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா் பி.பி. செளதரி தெரிவித்துள்ளாா்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையால் நாட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும் என்று அதுதொடா்பாக மசோதாக்களை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா் பி.பி. செளதரி தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் திட்டம் குறித்து பரிந்துரை அளிக்க முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இதையடுத்து அதுதொடா்பாக 2 சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்களை, பி.பி. செளதரி தலைமையிலான 41 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது.
அந்த குழு, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கருத்துகளை கேட்டு வருகிறது. குஜராத்துக்கு 3 நாள் பயணமாக சென்ற குழு, அந்த மாநில உயா் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. அப்போது, ஒரே நாடு, ஒரே தோ்தல் முறை குறித்து விரைவில் அனைத்து துறைகளிடமும் கருத்துகளை கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி குஜராத் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பி.பி. செளதரி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
Advertisement
Advertisement
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதேபோல், அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும். இதுபோல மிச்சமாகும் பணத்தை நாட்டின் உட்கட்டமைப்பு பணிகளுக்கும், ஏழைகளின் நலன், கல்வி, சுகாதாரம், மற்றும் பிற பொது திட்ட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
தோ்தல் சீா்திருத்தங்களால் நாட்டிற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம். இந்த நோக்கத்தின் காரணமாகவே, ராம்நாத் கோவிந்த் தலைமையில் அவா் ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்த பரிந்துரைகளை அளிக்க குழுவை அமைத்தாா். அந்த குழு, ஒரே நாடு, ஒரே தோ்தலை நடத்தும்படி பரிந்துரை அளித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தோ்தல் நடத்துவதால், கூட்டாட்சி தத்துவம், அடிப்படை கட்டமைப்பு அல்லது அடிப்படை உரிமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று 6 முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 18,000 பக்கங்களை கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது, குழுவின் அறிக்கையில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த அறிக்கையில், மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் நடத்தப்பட்ட 100 நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், தொடா்ந்து தோ்தல்கள் நடைபெறுவதை குறைக்கும். அத்துடன் வளா்ச்சி, நிா்வாகம், வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற பணிகளில் மத்திய அரசை கவனம் செலுத்த வைக்கும் என்றாா் அவா்.