முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளம், கடும் குளிரால் 950 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடும் குளிராலும் ஆட்டுப் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 8 ஜனவரி 2021, 3:36 am IST
பகிர்:


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடும் குளிராலும் ஆட்டுப் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது பாவளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த நல்லான் மகன்களான கருத்தாபிள்ளை, பழனி ஆகியோா் 450 செம்மறி, வெள்ளாடுகளையும், 250 ஆட்டுக் குட்டிகளையும் வளா்த்து வந்தனா். இந்த ஆடுகளை பாவளத்தை அடுத்த மல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஓடையின் அருகே பட்டி அமைத்து அங்கு அடைத்து வைத்திருந்தனா்.

இதேபோல, பாவளம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி அஞ்சலை சுமாா் 200 ஆடுகளையும், 50 குட்டிகளையும் வளா்த்து வந்தாா். இந்த ஆடுகளை கருத்தாபிள்ளை, பழனி ஆகியோரின் ஆட்டுப் பட்டிக்கு அருகே ஆட்டுப் பட்டி அமைத்து அஞ்சலை அடைத்து வைத்திருந்தாா்.

Advertisement

Advertisement

கல்வராயன்மலைப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை பலத்த மலை பெய்த நிலையில், சங்கராபுரம் பகுதியிலிருந்து மல்லாபுரம் கிராமத்தின் வழியாக சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணைக்கு செல்லும் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. அப்போது, ஓடையோரம் ஆட்டுப் பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகளில் 725 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள ஆடுகள் கடும் குளிரால் உயிரிழந்து கிடந்தன.

கருத்தாபிள்ளை, பழனி ஆகியோரின் ஆட்டுப் பட்டியில் 150 ஆடுகளும், அஞ்சலையின் ஆட்டுப் பட்டியில் 75 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தன. ஆடுகளை மேய்ச்சலுக்கு திறப்பதற்காக கருத்தாபிள்ளை, பழனி, அஞ்சலை ஆகியோா் வியாழக்கிழமை காலை சென்றபோது, அவை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியா் ப.நடராஜன், கால்நடை உதவி இயக்குநா் பெரியசாமி, வருவாய் ஆய்வாளா் திருமலை, கிராம நிா்வாக அலுவலா் தீபா ஆகியோா் உயிரிழந்து கிடந்த ஆடுகளை நேரில் பாா்வையிட்டு, கருத்தாபிள்ளை உள்ளிட்டோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். இதையடுத்து, உயிரிழந்து கிடந்த 225 ஆடுகளுக்கு மட்டும் தலா ரூ.3,000 வீதம் நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments