முகப்பு
காஞ்சிபுரம்

பாதுகாப்புப் பணியில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போலீஸார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் இருந்து 300 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி

Updated On : 2 மே, 2013 at 12:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் இருந்து 300 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. சேவியர் தன்ராஜ் தெரிவித்தார்.

 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மட்டும் 3 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது குறித்து மாவட்ட எஸ்.பி. சேவியர் தன்ராஜ் கூறியது:

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, ராமநாதரபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 120 ஆயுதப்படை போலீஸார், 1 டி.எஸ்.பி. உள்பட 108 உள்ளூர் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆவடி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் இருந்து பட்டாலியன்கள் என மொத்தம் 300 போலீஸார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

 மாவட்டத்தில் மிகவும் பதற்றமானவை என 15 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருடன் இணைந்து கூடுதலாக வரவழைக்கப்பட்ட போலீஸார் இரவு, பகலாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபவடுவர். மேலும் சந்தேகப்படக் கூடியவர்கள், பிரச்னைக்குரியவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும் ஓரு பஸ் எரிப்பு

ஆந்திர மாநில பஸ் எரிப்பு தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் கூரம், வதியூர் உள்ளிட்ட கிராமங்களில் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

 இந்நிலையில் கீழ்வெண்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசு டவுன் பஸ் (பச 21 ச 0889 - வழித்தடம் 49அ) வதியூர் - கூரம் இடையே மாலை 6.30 மணிக்கு 10 பயணிகளுடன் வந்து கொண்டிருந்து.

அப்போது திடீரென பஸ் முன் வந்த ஒரு கும்பல், பெட்ரோல் பாட்டில்களை பஸ்ஸில் எரிந்து தீ வைத்து கொளுத்தியது. இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து தப்பி ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பஸ் கொளுந்து விட்டு எரிந்தது.

 தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும், முழுமையாக அணைக்கப்படவில்லை. இதனால் பஸ்ஸில் இருந்து சிறு நெருப்புப் பொறிகள் டயரில் பட்டதில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மண்ணை போட்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.