ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் ஆலோசனை! விரைவில் புதிய நிர்வாகிகள்!
ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியது பற்றி...
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் திங்கள்கிழமை ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் நிர்வாகி அருண் குமார் மற்றும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு மற்றும் நிதின் நவீன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அமைப்பு ரீதியிலான மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜகவின் இளம் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நவீன் கீழ், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் முகங்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் கலந்துகொண்ட அருண் குமார், அந்த அமைப்பின் கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
வருகின்ற ஜூன் 20 - 21 ஆகிய தேதிகளில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி 3.0 அரசின் அமைச்சரவை மாற்றமும் ஏற்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் உள்ளவர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கும், கட்சி நிர்வாகிகள் அமைச்சரவைக்கும் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.