ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே குறித்து பாஜக மக்களவை உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி சர்ச்சைப் பேச்சு...
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விவரங்களைக் கோரிய கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவை விமர்சித்து பாஜக மக்களவை உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் பதிவு செய்து அதன் செயல்பாடுகள், சொத்துக்கள், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டுமென கடந்த திங்களன்று (ஜூன் 15) கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியிருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி, ஒரு உள்துறை அமைச்சர் என்ன கேட்க வேண்டுமென்பது குறித்த புரிதல் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு இல்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“ஆர்.எஸ்.எஸ். குறித்து கேள்விகள் கேட்பது அவருடைய (பிரியங்க் கார்கே) வேலையா என்ன? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழியில் குறுக்கே வந்தவர்கள் எவரும் நிலைத்திருக்கவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். உடன் தேவையில்லாமல் மோதலை உருவாக்குகிறார்.
என் கேள்வி என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒரு தலித் நபர் கவலைப்பட வேண்டிய தேவை என்ன?” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சிக்காகக் கடுமையாக உழைத்ததால் மட்டுமே அவரது மகனான பிரியங்க் கார்கேவுக்கு அமைச்சரவை ஒதுக்கப்பட்டதாகவும், ஜிகஜினகி குறிப்பிட்டுள்ளார்.