முகப்பு
காஞ்சிபுரம்

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கைது

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திருக்கச்சூர் ஆறுமுகத்தைப்

Updated On : 2 மே 2013, 12:55 pm IST
பகிர்:

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திருக்கச்சூர் ஆறுமுகத்தைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

 கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி பா.ம.க-வின் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கியது.

அதன்படி மாநாடு நடத்தும் போது ஜாதி, மதத்தைக் குறித்தோ, பிற சமூகத்தினரைக் குறித்தோ விமர்சனம் இருக்கக் கூடாது. மாமல்லபுரம் சுற்றுசூழலை தூய்மையாக பாதுக்காக்கும் வகையில் மாநாடு நடத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மாநாடு நடத்த பிறகு இடத்தை சுத்தம் செய்து தரவேண்டும். குறித்த நேரத்தில் மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக ஒப்புதல் அளித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் கையொப்பமிட்டார். இந்நிலையில், நிபந்தனைகளை மீறி புராதனச் சின்னங்களை சேதப்படுத்தியதாகவும்,

மாமல்லபுரம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் மாசுக்களை ஏற்படுத்திச் சென்றதற்காகவும், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தியமைக்காகவும் உள்ளிட்ட வழக்குகளை திருக்கச்சூர் ஆறுமுகம் மீது மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

பின்னர் அவரை திருக்கழுகுன்றம் முன்சீப் கோர்ட்டில் புதன்கிழமை போலீஸார் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, வரும் மே 14-ஆம் தேதி வரை அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.