முகப்பு
காஞ்சிபுரம்

வேதகிரீஸ்வரர் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த முடிவு

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றத்தில் உள்ள பக்தவத்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:56 am IST
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றத்தில் உள்ள பக்தவத்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கும்பாபிஷேக விழா நடைபெறுவதை ஒட்டி, ஆட்சியர் சித்ரசேனன் தலைமையில் விழா பாதுகாப்பு குறித்து அனைத்துத் துறையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் பேசியது: இத்தலத்தின் குடமுழுக்கு விழா எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியாகவும், சீரும் சிறப்புடன் நடைபெற பாதுகாப்பு மிகவும் அவசியம். அப்பணியை காவல்துறை சிறப்பாக செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

குடமுழுக்கு நடைபெறும் கோபுரத்தின் மீது அதிக அளவில் ஆட்களை ஏற்றக் கூடாது.  சிறப்பு அழைப்பாளர்கள் வாகனம், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தேர்வு செய்து அங்கும் மட்டும்தான் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்து மாற்றி அமைக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் உள்ள மேடுபள்ளங்களை சீரமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மின்சாரம் அன்று தடையில்லாமல் வழங்க வேண்டும். பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்குத் தேவையான மொபைல் டாய்லட் அமைத்திடவும், குடிநீர்த் தொட்டிகள் வைக்கவும், அந்த குடிநீரை சுகாதாரத் துறை பரிசோதனை நடத்தி வைக்கவும், பக்தர்களுக்கு தரப்படும் உணவு தரமானதாக தயார் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டார்.

சிறப்பு அழைப்பாளர்கள் வரவில்லை என்றாலும் குறித்த நேரத்தில் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்றார்.

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகரன், செங்கல்பட்டு ஆர்டிஓ தங்கராஜ், இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் மோகனசுந்தரம், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் முத்துசாமி, மாமல்லபுரம் காவல்துறைக் துணை கண்காணிப்பாளர் மோகன், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் புஷ்பா ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலரும், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்  திருக்கோயில் தக்காருமான பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஸ்ரீதர், நெடுஞ்சாலைத் துறை  உதவிகோட்டப்பொறியாளர் ஆதவன், போக்குவரத்துத் துறை செங்கல்பட்டு கோட்ட மேலாளர் தியாகராஜன், போக்குவரத்துத் துறை மக்கள்தொடர்பு அலுவலர் கோதண்டபாணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி, இந்துசமய அறநிலையத் துறை கோயில் ஆய்வாளர் அலமேலு, காஞ்சிபுரம் மாவட்ட கோட்ட தீயணைப்பு அதிகாரி ஜி.இளங்கோ உள்ளிட்ட 12 அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.