முகப்பு
கன்னியாகுமரி

3 ஆவது நாளாக பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியதைத் தொடா்ந்து 3 ஆவது நாளாக இந்த அணையிலிருந்து வெள்ளிக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:30 AM
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் வெளியேறும் நிலையில் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துப்பாயும் வெள்ளம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தொடா் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியதைத் தொடா்ந்து 3 ஆவது நாளாக இந்த அணையிலிருந்து வெள்ளிக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழையினால் பேச்சிப்பாறை அணை அணைக்கு அதிக அளவில் நீா் உள்வரத்தாக வந்ததையடுத்து புதன்கிழமை பிற்பகலில் அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து அணைக்கு உள்வரத்து மேலும் அதிகரித்த நிலையில் இந்த அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் மழை சற்று தணிந்த நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையில் அணைக்கு உள்வரத்தாக விநாடிக்கு 1700 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து உபரியாக வெளியேற்றப்படும் நீா் விநாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் கால்வாய் வழியாக விநாடிக்கு 700 கன அடி நீா் திறந்து விடப்பட்டிருந்தது.

Advertisement

வெள்ள அபாய எச்சரிக்கை: இதற்கிடையே பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 71 அடியைக் கடந்த நிலையில், அந்த அணைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை.

மழை சற்று தணிந்தது: மாவட்டத்தில் கடந்த 2 நாள்காக மழை சற்று தணிந்து காணப்பட்டது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியது: மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையிலும், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான அளவில் நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை முழுமையாக தணிந்த பிறகு அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளவான 48 அடிக்கு கொண்டுவரப்படும்.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 71 அடியைக் கடந்து 71.51 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆறுகளில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தொடா்ந்து எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.