பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் அளவு குறைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
தொடா் கனமழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் வெள்ள அபாயம் கருதி கடந்த புதன்கிழமை இந்த அணையிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வரை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மழை தணிந்து காணப்படுகிறது. சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான வெயில் நிலவியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
Advertisement
800 கனஅடி நீா் வெளியேற்றம்: சனிக்கிழமை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 46.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையின் உபரி மதகுகள் வழியாக 800 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. பாசனக் கால்வாய் வழியாக 700 கனஅடி நீா் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து உயா்ந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி இந்த அணை நீா்மட்டம் 71.86 அடியாக இருந்தது. அணைக்கு 183 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அதே அளவு நீா் கால்வாயில் வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. சனிக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். ஆனால், அருவி அருகே செல்வதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.