பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் : அன்புமணி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசாக்களும், டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசாக்களும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 பைசா உயர்ந்து ரூ. 66.85 ஆகவும், டீசல் விலை 61 பைசா உயர்ந்து ரூ. 53.53 ஆகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும். ஆனால், உலக சந்தையில் கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத புதிய வழக்கமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாள் தோறும் மாறக்கூடியது. எனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கான காரணியாக ரூபாய் மதிப்பைக் கருதக் கூடாது.
Advertisement
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாகும். எனவே, ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.