முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய கோரி வழக்கு

வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க

Updated On : 11 ஜூன் 2013, 8:02 pm IST
பகிர்:

வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.ஆர்.கிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போதைய நமது நாட்டு அமைச்சரவை முறை என்பது பிரிட்டிஷ் முறையாகும்.  நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ஆகும் வகையில் சம வாய்ப்பு அளிக்கும் முறை தற்போதைய பிரிட்டிஷ் மாதிரி அமைச்சரவையில் இல்லை. அதனால்தான் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு போதிய அளவில் தரப்படவில்லை. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து பிரதமர் ஆகி, ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலைமையே தற்போது உள்ளது.

ஆகவே தற்போது அமலில் உள்ள பிரிட்டிஷ் மாதிரி அமைச்சரவை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்திய சூழலுக்கு ஏற்ப அமைச்சரவை முறையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கிடையே தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் நீதி கிடைக்கச் செய்யும் வகையில் வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்,  மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைச் செயலாளர் மற்றும் மத்திய உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் கோரிக்கை மனுக்களை அனுப்பினேன். எனினும் எனது கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆகவே,  எனது கோரிக்கை மனுவை பரிசீலித்து தென் மாநிலங்களின் மக்களுக்கு அரசியல் நீதி கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பி.ஆர்.கிருஷ்ணன் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நாளை(புதன்கிழமை) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.