ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
உலகின் முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தில், 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வாழ்க்கை முறை மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதாக, ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் உலகின் முதல்நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியா, மலேசியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளும் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில், அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகத் தளங்களில் கணக்குகள் தொடங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக, இன்று (ஜூன் 18) அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிறார்களின் மனநலம், இணையவழி துன்புறுத்தல், அடிமையாக்கும் நடத்தைகள், உடல் உழைப்பு இன்மை குறித்த கவலைகளால், இந்த நடவடிக்கைக்கு அமீரகத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இணையவழிச் செயல்பாடுகளுக்கு அமீரகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடையை மீறும் கணக்குகள் மீது அரசு அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும், 15-16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.