FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்! - அன்புமணி

குழந்தைகளை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் 16 வயதுக்குட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து....

Updated On : 26 ஜூலை 2026, 6:14 pm IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்துயுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

குழந்தைகளில் நலன் கருதி அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு ஆஸ்திரேலியா தான். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும். 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் - மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.

சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். இதனால் உடல் பருமன், விட்டமின் டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.

கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. இந்தியாவில் தொலைத்தொடர்பு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31 ஆம் பொருளாக இடம் பெற்றுள்ளது. அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

summary

There should be a ban on social media use for those under 16....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments