கொலை செய்யும் நோக்கத்தோடு காயப்படுத்தியுள்ளனர் : விரைவு நீதிமன்ற நீதிபதி
தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும், அப்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு காயப்படுத்தியுள்ளதாக நீதிபதி கூறினார்.
தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும், அப்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு காயப்படுத்தியுள்ளதாக நீதிபதி கூறினார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை மீது புதன்கிழமை இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வழக்குரைஞர்களும் தண்டனை குறித்து தங்களது இறுதி வாதத்தை எடுத்துரைத்தனர்.
கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்து வரும் சாகேத் விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா இறுதி விசாரணையின் போது கூறியதாவது, அப்பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு, அவளை கொலை செய்யும் நோக்கத்தோடு மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். அனைத்து குற்றவாளிகளும் அதே குறிக்கோளுடன்தான் செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Advertisement
வெளியில் காயங்களை ஏற்படுத்தியதுடன், இரும்பு ராடுகளை வயிற்றுக்குள் செலுத்தியும், கையை விட்டு வயிற்றுக்குள் இருக்கும் உள்ளுறுப்புக்களை வெளியே இழுத்தும் மிகக் கொடூரமாக கொலை செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார்.
அப்போது குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், அப்பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தாலேயே அவள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதி, ஒரு பெண்ணின் உடலுக்குள் இரும்பு ராடைக் கொண்டு செலுத்தினால், அப்பெண்ணின் நிலைமை என்னவாழும். அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவளது உடலில் ஏற்பட்டுள்ள பல காயங்கள் மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு இருப்பதாகக் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும், அப்பெண்ணும், அவளது ஆண் நண்பரும் பேருந்துக்குள் ஏறிய பிறகு, வேறு யாரையும் பேருந்துக்குள் அவர்கள் ஏற்ற அனுமதிக்கவில்லை. எனவே, இது திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றச்செயல் என்பது நிரூபணமாகிறது.
இரும்பு ராடை குற்றவாளிகள் பயன்படுத்தியிருக்கும் விதம், அதனை "டெட்லி வெப்பன்" என்று குறிப்பிடும் வகையில் உள்ளது என்றார் நீதிபதி.