முகப்பு
தற்போதைய செய்திகள்

விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது : பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமருக்கும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதி உள்ளார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 11:08 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமருக்கும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதி உள்ளார்.

நாட்டின் இலாபம் ஈட்டுகின்ற மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா) பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, மேற்கண்ட விமான நிலைங்களை நவீனப்படுத்தியுள்ள நிலையில், இந்த விமான நிலையங்களை மத்திய அரசு ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியும், மத்திய அரசின் இத்திட்டம் சமூக சமத்துவத்தின் வேரையே சாய்க்கும் செயல் ஆகும் என்றும் வைகோ கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நவீன தொழில்நுட்பமும் திறமை மிகுந்த மனித வளமும் இருப்பதால்தான் அயல்நாடுகளிலும் உலகத்தரச் சான்று பெற்றுள்ள பல விமான நிலையங்களை ஆணையம் கட்டி முடித்துள்ளது. உலக அளவில் சிறந்த விமான நிலைய சேவைகளுக்கான பல விருதுகளையும் ஆணையம் பெற்றுள்ளது.

Advertisement

இத்தனை சிறப்பும், நிர்வாகத் திறமையும் கொண்ட ஆணையத்திடம் இருந்து, மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றும், டெல்லி விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைத்ததில் 1.63 இலட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் வைகோ கடிதத்தில் சுட்டிக்காட்டி  உள்ளார்.

பொது நலனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு சென்னை, கொல்கத்தா விமான நிலைங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் என்று தனது கடிதத்தில் கோரி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.