திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
மருத்துவமனையை சூறையாடி ஊழியர்களைத் தாக்கிய கும்பலை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்
மருத்துவமனையை சூறையாடி ஊழியர்களைத் தாக்கிய கும்பலை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெள்ளிக்கிழமை காலை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் அருகே முன் விரோதம் காரணமாக புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகன் கமலநாதன் மர்ம கும்பலால் வெட்டப்பட்டார்.
வெட்டப்பட்டு கிடந்தவரை அப்பகுதியைச் சேர்ந்த நபர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கியும் அங்குள்ள மேஜை நாற்காலியை உடைத்தும், மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களை அடித்தும் நொறுக்கினர்.
Advertisement
Advertisement
தடுக்கச் சென்ற போலீஸாரை தாக்கியபோது படம் பிடித்த நிருபரையும் தாக்கி அவரது கேமராவை உடைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் மருத்துவமனைக்குள் செல்லாமல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருவள்ளூர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் அங்கு சென்று டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களைத் தாக்கியும் இங்குள்ள பொருள்களை சேதப்படுத்தியும் அத்துமீறி நடந்துக் கொண்ட கொலை வெறி கும்பலை மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து 5 வருடம் சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக ஏ.டி.எஸ்.பி., உறுதியளித்தன் பேரில் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.