விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் பொறுப்பேற்பு
இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுதில்லி: இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து நாட்டிற்காக உயரிய தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
தேசிய பாதுகாப்பு அகாதமியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங், 1987 ஜூன் 13 ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர்ப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
அவர் 4500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட 'ஏ' பிரிவு தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர்.
Advertisement
Advertisement
பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர்.
போர் படைப்பிரிவு, ரேடார் நிலையம், முதன்மையான போர் தளம் ஆகியவற்றில் பணிபுரிந்த தேஜிந்தர் சிங், ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை காமாண்டிங் அதிகாரியாக இருந்தார். விமானப் படையின் துணைத் தளபதி நியமனத்திற்கு முன், மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப்படையின் கிழக்கு காமாண்டிங் தலைமையகத்தில் மூத்த விமானப் படை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
2007 ஆம் ஆண்டில் அவருக்கு வாயு சேனா பதக்கமும், 2022 இல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.