சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கான 17 நாள் அரசுமுறை அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

DIN

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கான 17 நாள் அரசுமுறை அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகில் சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது தொடர்பாக செய்தியாளர்களு்கு பேட்டி அளித்தார்.

சாதனைப் பயணம்

அப்போது, அமெரிக்கா பயணம் வெற்றிகரான பயணம், தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம்.

உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களை இந்த பயணத்தில் சந்தித்துள்ளேன். 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் ரூ.7,618 கோடி மூதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எனது கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு, அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு

தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்களது வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க முன்வந்துள்ளது.

அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி அமைத்து, உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவித்த காரணத்தினால் அனைத்து வசதிகளும் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்ற அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்கள் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

நாங்கள் சிகாகோ விமான நிலையத்தில் விமானத்தில் உட்கார்ந்த பிறகு அறிவித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அந்த செய்தியை இன்றைக்கு உங்களுடன் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டிருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்

சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன்.

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் செய்துள்ளன.

இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

முதலீடுகள் 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றப்படும்

முதலீடுகள் வந்ததது. எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இப்போது வந்திருக்கக்கூடிய முதலீடுகள் 100-க்கு 99 என்று கூட சொல்லமாட்டேன். 100-க்கு 100 அதை நிறைவேற்றக்கூடிய வகையில்தான் இந்த முதலீடுகளை நாங்கள் ஈர்த்திருக்கிறோம். அதற்கான வேலைவாய்ப்புகளும் விரைவாக உருவாக்கப்படும். அது வருகிறபோது உங்களுக்கு அவ்வப்போது சொல்கிறோம் என முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT