பென்னாகரம்: இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வளத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 65,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
வெள்ளப்பெருக்கால் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு, பிரதான அருவி செல்லும் நடைபாதையை மூழ்கடித்து வெள்ளநீர் செல்வதாலும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக தடை விதித்துள்ளார்.
இதனால் பிரதான அருவி செல்லும் நுழைவு வாயில், ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.