ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...
பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் நீர்வரத்து ஒகேனக்கல்லுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொருத்தவாறு காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது காலையில் அதிகரிப்பதும், மாலையில் குறைவதுமாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவு சற்று அதிகரித்து, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
மேலும் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர் வளத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.