கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!
கோவையில் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்தது குறித்து...
கோவை: கோவை, திருப்பூரில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து கள நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் நிலையில், பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக விநியோகித்து வருகின்றன.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் கள நிலவரம் குறித்து கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதேபோன்று திருப்பூரிலும் வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்து கள நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். உளவுத்துறை தகவலின் அடிப்படையில் சபரீசன் இந்த ஆலோசனையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ரூ.8000 போலி பரிசு கூப்பன்கள் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதி தென்னம்மநல்லூர் பகுதியில் போலி பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்த திமுகவினரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கையும், களவுமாக பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடனடியாக இந்த மோசடி கும்பல்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூரில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை முதல்வரின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.