திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
தமிழகத்தில் மாவட்டவாரியாக திமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழகத்தில் மாவட்டவாரியாக திமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
ஏப். 29 மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பான்மையாக திமுக ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டுள்ளன.
Advertisement
இந்நிலையில் மாவட்டவாரியாக திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசி வருகிறார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களைச் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கள நிலவரம், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள், முகவர்கள் செயல்பாடு உள்ளிட்டவை பற்றி பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக வெளியிட்டுள்ள செய்தியில்,
"தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவரை இன்று (01.05.2026), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், கழக வேட்பாளர்கள், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி, இரா.இராஜேந்திரன், வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன், தே. மதியழகன், க. சுந்தர், தோப்பு வெங்கடாசலம், நிவேதா எம். முருகன், வசந்தம் கார்த்திகேயன், என். நல்லசிவம், எம். சிவபாலன், ஈ. இராஜா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா,எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.