திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது குறித்து...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஓம் நம்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதும், 274-சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்புப் பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி, சித்திரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.
தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது,
மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து பலஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய, சிவ சிவா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.