புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் மரணமடைந்தது குறித்து...
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தலைவர் மர்ம வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் மௌலானா சல்மான் கடந்த புதன்கிழமை (ஏப். 29) காலை மர்ம வாகனம் ஒன்று மோதியதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மௌலானா சல்மானின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றதாகவும், அந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான சல்மான், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், மௌலானா சல்மான் படுகாயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.